Monday, August 21, 2006

திரவ வெடிகுண்டுகள்


சென்ற வாரத்தில் பிரிட்டனிலிருந்து கிளம்பும் பத்து அமெரிக்கா விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கும் செய்தி இங்கிலாந்தின் உளவுத்துறைக்கு கிடைத்ததை தொடர்ந்து உலகின் அனைத்து விமான நிலையங்களும் உஷார்ப்படுத்தப்பட்டன. விமான பயணிகள் தீவிரமான சோதனைக்கு உள்ளாயினர். சந்தேகப்படும்படியான நபர்கள் தாட்சயண்யமின்றி பாதுகாப்பு படையினரால் விசாரிக்கப்பட்டனர். விமானங்கள் ரத்து, தாமதம், பதட்டம் என மூன்று நாள்களுக்கு தீவிரவாதிகள் குறித்து பயம் ஒரு புகையாக எங்கும் பரவியிருந்தது.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு தீவிரவாதம் குறித்த அச்சம் உலக மக்களின் இரத்தத்தில் நிரந்தரமாக படிந்துவிட்டது. ஆபத்து குறித்த எச்சரிக்கைகளை அவர்கள் எப்போதும் எதிர்நோக்கியே உள்ளனர்.இருப்பினும் பிரிட்டன் விமான தகர்ப்பு குறித்த எச்சரிக்கை இதுவரை இல்லாத பீதியை அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்தியது. தகர்ப்பு சதியில் ஈடுபட்ட 24 தீவிரவாதிகள் கைதான பிறகும் அபாயம் குறித்த அச்சம் முழுமையாக விலகவில்லை என்றே சொல்ல வேண்டும்.
காரணம், தீவிரவாதிகள் விமானத்தை தகர்க்க திட்டமிட்டிருந்த திரவ வெடிகுண்டு! ஆர்.டி.எக்ஸ். போன்ற திட வெடிப் பொருள்கள் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளக்கூடியவை. மோப்ப நாய்களின் மோப்ப சக்திக்கு உள்பட்டவை. விமான நிலையங்களில் உள்ள எக்ஸ்ரே கதிர் சோதனை கருவியிடமிருந்து தப்ப முடியாதவை.
ஆனால்,திரவ வெடிகுண்டுகள் மேலே சொன்ன அனைத்தையும் ஏமாற்றிவிடும் குணாதிசயங்கள் கொண்டவை. மோப்ப நாய்களுக்கு இவற்றை கண்டுபிடிக்கும் திறமை இன்னும் கூடிவரவில்லை. எக்ஸ்ரே சோதனை கருவி திரவ வடிவிலிருக்கும் வெடிகுண்டை மினரல் வாட்டர் என்றே காண்பிக்கும். இதனால்தான் எப்போதும் இல்லாத வகையில் விமான தகர்ப்பு சதி உலகநாடுகளை பெரும் அச்சத்தில் தள்ளியது.
இந்த இடத்தில் ஒரு அத்தியாவசிய இடைச்செருகல்.ஹாலிவுட் திரைப்படங்களில் இப்படிப்பட்ட வித்தியாச வெடிகுண்டுகள், நூதனமான கடத்தல்கள், கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து காண்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த கதைகளை உருவாக்குவதற்கு என்றே தனியாக நிபுணர் குழு ஒன்று இயங்கி வருகிறது. 'தி டாவின்சி கோட்' படத்தின் கதையை எழுதிய டான் பிரவுன் பத்து வருடங்கள் பல உதவியாளர்களின் துணையுடன் இந்தக் கதைக்காக ஆராய்ச்சி செய்திருக்கிறார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரமும்,பென்டகனும் தகர்க்கப்பட்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த பலருக்கு, ஹாலிவுட் திரைப்படத்தை பார்க்கும் மனோநிலையே ஏற்பட்டது. இது அப்போது அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் விவாதத்தை அமெரிக்காவிலும் அமெரிக்காவுக்கு வெளியேயும் ஏற்படுத்தியது. ஹாலிவுட் திரைப்படங்களில் தீவிரவாதிகளின் தாக்குதலாலும், இயற்கை சீற்றத்தாலும், வேற்று கிரகவாசிகளின் ஆக்ரமிப்பாலும் அந்நாடு முற்றிலும் அழிந்துவிடுவதாக ஒருமுறை அல்ல பலமுறை காண்பிக்கப்பட்டுள்ளது. 'வால்கனோ', 'டீப் இம்பாக்ட்', 'டெர்மினேட்டர்', 'ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட்' உள்பட பல படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
திரைப்படங்களில் தத்ரூபமாக தங்கள் நாட்டின் அழிவை பலமுறை பார்த்தவர்கள் உண்மையான இரட்டை கோபுர தகர்ப்பை ஹாலிவுட் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியாக நினைத்து ரசித்ததில் வியப்பொன்றுமில்லை! மேலும், இப்படிப்பட்ட படங்கள் நிஜமான அழிவின் போது மக்களிடையே அளவுக்கதிமான பயத்தை உருவாக்குகின்றன.
உதாரணமாக, மூன்று 6-கள் இணையும் தினத்தில் பிறக்கும் குழந்தை சாத்தானின் வடிவமாக இருக்கும், அக்குழந்தையால் இந்த உலகுக்கே ஆபத்து நேரும் என்ற கதையுடன் வெளிவந்த 'ஓமன்' திரைப்படம் உலகெங்கும் மூன்று 6-கள் குறித்த அச்சத்தை தீவிரப்படுத்தியது. இந்த வருடம் ஜூன் ஆறாம் தேதி மூன்று 6-கள் ஒன்று சேர்வதால் (06-06-06)'ஓமன்' திரைப்படத்தில் வரும் அழிவுகள் பூமியில் நடக்கும் என பரவலாக ஒரு அச்சம் எழுந்தது அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் திரவ வெடிகுண்டு குறித்த அச்சத்திற்கும் துவக்கப் புள்ளியாக ஹாலிவுட் திரைப்படம் ஒன்று இருக்கிறது.
1992-ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான திரைப்படம் 'லைவ் வயர்.' (அமெரிக்க செனட்டர்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.கொலைக்கான கருவியையே கண்டுபிடிக்க முடியாத நிலையில் விசாரணையை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்வது என திணறுகிறது போலீஸ்.
இறுதியில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. வழக்கு விசாரணையில் அமர்த்துகிறது. இந்நேரம் முந்தைய வழக்கு விசாரணையின் தீர்ப்பை படிக்கும் நீதிபதி, தீர்ப்பை வாசிக்கும் முன் தண்ணீர் அருந்துகிறார். அருந்தி முடித்த சிறிது நேரத்தில் மரணமடைகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகே தீவிரவாதிகள் பயன்படுத்தும் கொலைக்கருவி எது என்பது தெரியவருகிறது.
நிறமற்ற சில குறிப்பிட்ட ரசாயனங்கள் குடலுக்குள் செல்லும்போது, அங்குள்ள ஜீரண அமிலங்களுடன் வேதிவினை புரிந்து சக்திவாய்ந்த வெடிபொருளை போல் குடலுக்குள்ளே அதிக வெப்பத்தையும் அழுத்தத்தையும் வெளிப்படுத்தி, பயங்கரமாக வெடித்து சிதறுகின்றன. கொலைக்கு பயன்படுத்தப்பட்டது திரவ வெடிகுண்டு என்பது தெரியவந்ததும்,வழக்கு விசாரணை துரிதமாகிறது. தீவிரவாதிகளும் பிடிபடுகிறார்கள். பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் னுயnலே டீ'சூநடை கேரக்டரில் நடித்த இப்படம் திரவ வெடிகுண்டு சாத்தியம்தானா என்ற கேள்வியை படம் வெளியானபோது ஏற்படுத்தியது.
ஆனால், திரவ வெடிகுண்டு சாத்தியம்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வெளிநாடுகளில் விமான பயணங்களில் கையோடு மதுபாட்டில்களை எடுத்துச்சென்று அருந்துவது சகஜமான நடைமுறை.பெராக்சைடு வகை ரசாயனத்தை மது புட்டியில் அடைத்து எளிதாக விமானத்திற்குள் கொண்டு செல்லமுடியும். விமானம் டேக் ஆஃப் ஆகி, நடுவானில் பறக்கும்போது பிரத்யேக லேசர் ஒளிக்கீற்றை மதுபுட்டியில் உள்ள திரவ வெடிபொருளின் மீது பாய்ச்சி, அதனை வெடிக்க வைக்க முடியும். லேசர் ஒளிக்கீற்றை ஸ்பெஷல் கேமரா பிளாஸ் மூலம் உருவாக்க முடியும்.
சிறிய மதுபுட்டியில் உள்ள திரவம் பெரிய விமானத்தை தகர்க்கக்கூடிய சக்தி வாய்ந்ததா?
வெடிபொருள்கள் வெடிக்கும்போது வெளியிடப்படும் வெப்பத்தைவிட,அது காற்றில் ஏற்படுத்தும் அழுத்தமே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடுவானில் பறக்கும் விமானத்தின் காற்றழுத்தத்தை இரண்டு சதவீதம் அதிகரித்தாலே, விமானம் சுக்குநூறாகிவிடும். இரண்டு சதவீத அழுத்தத்தை உருவாக்க குவார்ட்டர் பார்ட்டில் திரவவெடிகுண்டு தாராளம்! டாங்க் முழுவதும் எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம் சக்தி வாய்ந்த ஏவுகணையாக இரட்டை கோபுரங்களை தகர்த்ததை இந்த இடத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.
நாம் மேலே பார்த்த அதிநவீன வெடிபொருள்களும், நூதன முறைகளும் ஹாலிவுட்டில் மட்டுமல்ல இந்திய சினிமாக்களில் தற்போது இடம் பெறுகின்றன. முக்கியமாக கேமரா பிளாஸ் மூலம் வெடிகுண்டை ஆக்டிவேட் செய்து வெடிக்க வைப்பது.
சில ஆண்டுகள் முன்பு மலையாளத்தில் வெளிவந்த படம் 'தி ட்ரூத்.' மம்முட்டி சி.பி.ஐ. ஆபிசராக நடித்தது. கேரளாவின் முதல் மந்திரி மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது மேடை வெடிகுண்டால் தகர்க்கப்படுகிறது. மேடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை, பத்திரிகையாளர் வரிசையில் இருக்கும் கொலையாளி பிரத்யேகமான கேமரா பிளாஷை பயன்படுத்தி வெடிக்க வைக்கிறான். இந்தியாவில் இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இப்படியொரு நவீன முறையை கையாண்டதாக செய்தி இல்லை.
தீவிரவாதத்துக்கு முன்னோடியாக சில சினிமாக்கள் இருப்பதை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். சுவாரஸியத்திற்காக சேர்க்கப்படும் இத்தகைய காட்சிகள், நடைமுறையில் யதார்த்தம் ஆகும்போது மக்கள் அதிகபடியான பீதிக்குள்ளாகிறார்கள்.பொறுப்புள்ள இயக்குனர்கள் இதனை கவனத்தில் கொண்டு காட்சிகளை அமைப்பதே ஆரோக்கியமானது!
ஆக்கம் : ஜான்பாபுராஜ்

1 Comments:

Blogger Vi said...

நல்ல கருத்து. போய் சேர வேண்டிய இடம் சேர்ந்தால் மிக்க பயனுள்ளதாய் இருக்கும். இயக்குனர்கள் இணையத்தை உபயோக்கிக்கிறார்களா? அதைச் சேர்ந்தவர்களாவது யாராவது இயக்குனர்கள் சங்கத்திற்கு இந்த கட்டுரையை அனுப்புங்கள். நடிகர் சங்கத்திற்கும் cc போட மறந்து விட வேண்டாம். இல்லையென்றால் மீண்டும் அவர்களுக்குள் மோதல் உருவாகிவிடும். நமக்கு நல்ல `அரிய தமிழ் திரைபடங்கள்' கிடைக்காமலேயே போய்விடுமல்லவா? அதற்காகத் தான்.

எழுத்து நடை அற்புதம். கருத்துக்கள் தொடர்ச்சியாக கையாளப்பட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.

2:51 AM  

Post a Comment

<< Home